பற்களும் பாதுகாப்பு முறைகளும்! --- ஹெல்த் ஸ்பெஷல்,

முத்துப் போன்ற பற்கள்... முகத்தை அழகாக்கும்.  'பல் போனால் சொல் போச்சு’ போன்ற பற்களைப் பற்றிய பளிச் பழ...

முத்துப் போன்ற பற்கள்... முகத்தை அழகாக்கும்.  'பல் போனால் சொல் போச்சு’ போன்ற பற்களைப் பற்றிய பளிச் பழமொழிகள் ஏராளம். பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்களும் நம்மை எட்டிப்பார்க்கும். பற்கள்தான் ஒருவரின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன என்கிறது மருத்துவ உலகம். பற்களை ஆரோக்கியமாகப் பாதுகாத்தாலே போதும், பெரும்பாலான நோய்களுக்கு, நோ என்ட்ரிதான். 
மிகப் பெரிய நிறுவனம் ஒன்றின் தலைமை அதிகாரியாகப் பணிபுரிபவர் 55 வயதான கமலேஷ்.  யாருடனும் அதிகம் பேச மாட்டார். வெளியிடங்களுக்கு அதிகம் செல்ல மாட்டார். நண்பர்கள், உடன்பணிபுரிபவர்கள் விருந்துக்கு அழைத்தால்கூட போகமாட்டார். வார்த்தைகளை அளந்து பேசுவார். இதனால் மற்றவர்கள் மத்தியில். 'மனுஷன் வாயைத் திறக்கிறாரா பாரு... கல்லூளி மங்கன், அழுத்தக்காரன், திமிர் பிடித்தவன்’ என்றெல்லாம் பட்டப் பெயர்கள் இருந்தன.
ஆனால் உண்மையில் அவர் மிகவும் எளிமையான நபர். பல்லில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவருக்கு அனைத்துப் பற்களையும் எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், பல் செட் போட்டுக்கொண்டார். மற்றவர்களுடன் பேசும்போது, எங்கே... பல் செட் கழன்றுவிடுமோ? என்ற பயம்.  சாப்பிடும்போது விழுந்து விடுமோ என்ற தயக்கம்தான் இதற்கெல்லாம் காரணம்.  பல் செட் போட்டது முதல், தன்னம்பிக்கை இழந்து அவர்பட்ட அவஸ்தைகள் ஏராளம். கடைசியில், கைகொடுத்தது நவீன முறையில், விழாத செயற்கைப் பல் கட்டும் (இம்பிளான்ட்) சிகிச்சை. தற்போது தன்னம்பிக்கையுடன் மற்றவர்களை எதிர்கொள்கிறார். அனைவருடனும் சிரித்துப் பேசி மகிழ்ச்சியாக இருக்கிறார்.'' இப்படி எவ்வளவு பெரிய அந்தஸ்தில் ஒருவர் இருந்தாலும் அவரது தன்னம்பிக்கையையே தரைமட்டமாக்கக்கூடியது பற்கள்.
பற்களில்  ஏற்படும் பாதிப்பு கள், தீர்வுகள், பராமரிப்புகள், சிகிச்சைகள் என ஒட்டுமொத்த பல் பாதுகாப்பு குறித்தும் விரிவாய் தந்துள்ளனர் டாக்டர்கள் எம்.எஸ்.ரவி, சுனிதா ரவி, அஸ்வினி, சௌமியா.  பற்களைப் பற்றி விரிவாக வரிசையாகத் தொடுக் கப்பட்டுள்ள இந்த கையேடு உங்கள் பல் ஆரோக்கியத்திற்கான பளிச் கைடு!  
பராமரிப்பும்/பாதுகாப்பும்
பிரஷ்: ஹார்டு, மீடியம், சாஃப்ட் என மூன்று வகைகளில் பிரஷ்கள் கிடைக்கின்றன. பொதுவாக பல் மருத்துவர்கள் ஹார்டு பிரஷ்களை பரிந்துரைப்பது இல்லை. பற்கூச்சம் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு சாஃப்ட் வகை டூத் பிரஷ்களையும், மற்றவர்கள் மீடியம் வகை பிரஷ்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். பிரஷின் தலைப் பகுதி சிறியதாக இருந்தால் மட்டுமே அது நல்ல பிரஷ். அப்போதுதான் பல் வரிசையின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று சுத்தம் செய்ய வசதியாக இருக்கும்.  கைப்பிடி நன்றாக சௌகரியமாக இருக்க வேண்டும்.
பிரஷில் உள்ள இழைகள், பூ காம்புகளைப் போன்று வளைய ஆரம்பித்தால், உடனே பிரஷை மாற்றிவிட வேண்டும். பொதுவாக, இந்த இழைகள் 60 நாட்களில் வளைய ஆரம்பிக்கும். எனவே, 60 முதல் 90 நாட்களுக்கு ஒரு முறை பிரஷை மாற்றுவது நல்லது.  
பற்பசை: ஃப்ளோரைட், உப்பு, ஜெல் எனப் பல்வேறு பற்பசைகள் உள்ளன. ஃப்ளோரைட் உள்ள பற்பசையானது பற்களுக்கு வலிமை சேர்க்கும். அதுவும் 10 லட்சத்துக்கு ஒன்று என்ற அளவில் ஃப்ளோரைட் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ட்ரைக்ளோசான் உள்ள பற்பசைகள் ஈறுக்கு வலிமை சேர்க்கும். ஜெல் உள்ள பற்பசைகளைத் தவிர்க்கலாம்.
குழந்தைகள் பற்பசையை விழுங்கிவிடக்கூடும். இதனால் பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக, பிரத்யேகப் பற்பசைகள் கிடைக்கின்றன. இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.  எவ்வளவு பற்பசையைப் பயன்படுத்துகிறோம் என்பதைவிட, பற்பசையால் எப்படி பிரஷ் செய்கிறோம் என்பதில்தான் சூட்சுமமே இருக்கிறது. ஒரு பட்டாணி அளவுக்கு பற்பசை இருந்தால் போதும்.  அதைக்கொண்டே பற்களைத் துலக்கலாம். இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்குள் பல் துலக்கிவிட வேண்டும்.
பற்களை எப்படித் துலக்கலாம்?
பெரும்பாலும் பல் துலக்கும்போது பிரஷை இட வலமாக பற்களின் மேல் அழுத்தித் தேய்ப்பார்கள். இப்படி செய்வதால் எந்த பலனும் இல்லை. அழுத்தித் தேய்ப்பதால் பற்களின் மேல் இருக்கும் கிருமிகள், உணவுத் துகள்கள் பல் இடுக்கில் தங்கிவிடும். இதனால் பற்கள் தேயவும் வாய்ப்பு உள்ளது. டூத் ப்ரெஷ்ஷை 45 டிகிரி சாய்த்து மெதுவாக ஒவ்வொரு பல்லிலும், உங்கள் ஈரும், பல்லும் சந்திக்கும் இடத்தில் இருந்து மென்மையாக துலக்க வேண்டும். இதேபோன்றே முன்பக்கம், பின்பக்கப் பற்களை துலக்க வேண்டும். உணவு மெல்லும் பகுதியில் மட்டும் பிரெஷைக்கொண்டு ஒரு சுற்று சுற்றுவது போல துலக்க வேண்டும். ஒவ்வொரு பல்லுக்கும் செய்ய இரண்டு முதல் மூன்று நொடிகள் போதுமானது. இப்படி செய்வதன் மூலம் ஈறுகளில் ஒளிந்திருக்கும் உணவுத் துகள்கள் மற்றும் கிருமிகள் வெளியேற்றப்பட்டு பற்கள் பளிச்சிடும். பல் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பல் துலக்குவது நல்லது. பல் துலக்கிய பிறகு நாக்கை சுத்தம் செய்வது அவசியம். நாக்கை வேகமாக இழுக்காமல் மென்மையாக இழுத்து, நாக்கின் மேல் படிந்துள்ளவற்றை அகற்றலாம்.
இருமுறை பல் துலக்குங்கள்:
பல் துலக்கும் நுட்பத்தைத் தெரிந்து மிகச் சிறப்பாக பல் துலக்கினாலும்கூட,  90 சதவிகிதம் அளவுக்குத்தான் கிருமிகளை அகற்ற முடியும். மீதம் உள்ள 10 சதவிகித கிருமிகள் பெருக்கம் அடைந்து, பற்களைத் தாக்க 12 மணி நேரம் போதுமானது. அப்படி இருக்கும்போது பல் துலக்கும் நுட்பம் தெரியாமல் பல் துலக்குப்பவர்களுக்கு அதன் மூலம் கிருமிகள் அகற்றம் என்பது மிகக் குறைவாகவே இருக்கும். இந்த கிருமிகள் பற்களைத் தாக்கும் அளவுக்கு பெருக்கம் அடைய சில மணி நேரங்களே போதுமானது. எனவே, ஒரு நாளைக்கு காலை மற்றும் இரவு என இருமுறை பல் துலக்குவது மிகவும் அவசியம். பல் துலக்கிய பிறகு ஈறுகளை மென்மையாக அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். நாக்கில் உள்ள பசையை அகற்ற வேண்டும்.
ஃபிளாஸ்ஸிங்:
பல் துலக்குவதன் மூலம் பல்லின் முன்புறம், மேல் புறம், பின்புறத்தை சுத்தம் செய்கிறோம். ஆனால், இரண்டு பற்களுக்கு இடையே உள்ள பகுதிக்கு பிரஷ் செல்ல முடியாது. இங்குதான் உணவுத் துகள்கள் சிக்கிக்கொள்கின்றன. தினமும் ஃபிளாஸ்ஸிங் செய்வதன் மூலம் பற்களுக்கு இடையில் உள்ள உணவுத் துகள்களை அகற்றலாம். இரு பற்களுக்கு இடையில் மெழுகு தடவப்பட்ட மெல்லிய நூலை செலுத்தி மேலும் கீழுமாக மெதுவாக இழுக்கும்போது அங்குள்ள உணவுத் துகள்கள், அழுக்குகள் வெளியேற்றப்படும். இதற்கென உள்ள டென்டல் ஃபிளாஸ்ஸிங் கயிறுகளை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
இயற்கை பிரஷ்ஷிங்:
இயற்கையான கரும்பு, அன்னாசிப்பழம் போன்ற சில உணவுப் பொருட்கள் நம்முடைய பற்களை சுத்தம் செய்யும் தன்மைகொண்டது. அதிக அளவில் நார்ச் சத்து உள்ள பச்சைக் காய்கறி போன்ற உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது உடலுக்கும், பற்களுக்கும் ஆரோக்கியமானது. சுத்திகரிக்கப்பட்ட மைதா, சர்க்கரை போன்றவை பற்களைப் பாதிக்கக்கூடியவை. கொத்தமல்லித் தழையை லேசாகக் கழுவிவிட்டு சமைக்காமலேயே பயன்படுத்துகிறோம்.  மேலும், பச்சைக் காய்கறிகளை அப்படியே சாப்பிடும்போது, உணவுகளில் கிருமிகள் இருக்கலாம். இவை பற்களையும் பதம் பார்க்கும். காய்கறிகளை வெந்நீரில் போட்டு லேசாக வெந்ததும் சாப்பிடுவது நல்லது.
பளீர் பற்கள்
காபி, தேநீர் போன்றவற்றை தினமும் ஒன்று அல்லது இரண்டு கோப்பைக்கு மேல் குடிக்கக் கூடாது. புகைத்தல், மது அருந்துதல், கோலா கலந்த குளிர்பானங்கள் அருந்துவது, பாக்கு போடுதல் போன்றவற்றால் பற்களில் கறை ஏற்படுவதுடன், பல்லின் ஆரோக்கியத்துக்கும் வேட்டு வைக்கும். பல்லில் அடிபடுவதாலும் பழுப்பு நிறம் ஏற்படலாம்.
கர்ப்பக்காலத்தில் டெட்ராசைக்ளின் என்ற மாத்திரையை எடுத்துக்கொள்பவர்களின் சிசுவுக்கு பற்களின் நிறம் மஞ்சளாக இருக்கலாம். பொதுவாக டாக்டர்கள் கர்ப்ப காலத்தில் இந்த மாத்திரைகளைப் பரிந்துரைப்பது இல்லை. சுய மருத்துவம் எடுத்துக்கொள்ளும்போது இந்தப் பிரச்னை வரலாம் என்பதால் ஜாக்கிரதை.  பளிச்சென்ற பற்கள் கிடைக்க, பல் மருத்துவர்கள் ப்ளீச்சிங் என்ற சிகிச்சை அளிப்பார்கள். வீட்டிலேயேகூட டாக்டரின் ஆலோசனையின் பேரில் பற்களுக்கு ப்ளீச்சிங் செய்துகொள்ளலாம்.
மவுத் வாஷ்
மவுத் வாஷ் பயன்படுத்தலாமா வேண்டாமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. பற்களை வலுவாக்க, ஈறுகளை வலுவாக்க, பல் கூச்சத்தைப் போக்க என மூன்று வகையான மவுத் வாஷ்கள் வருகின்றன. பற்களை வலுவாக்கும் மவுத் வாஷில் ஃப்ளோரைட் கலந்திருக்கும். புத்துணர்வு தரக்கூடிய மவுத் வாஷ்கள் ஈறுகளைப் பலப்படுத்தும். நம் வாயில், கெடுதலை விளைவிக்கும்  நுண் உயிரிகள் இருப்பதுபோல், நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிரிகளும் உள்ளன. மவுத் வாஷ் செய்யும்போது இந்த கெடுதலை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளுடன், நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும் அழிந்துவிடும். இதனால் வாய் உலர்ந்துபோகும் தன்மை போன்ற பிரச்னை ஏற்படலாம். எனவே, டாக்டரின் பரிந்துரையின்றி மவுத் வாஷ்களைப் பயன்படுத்த வேண்டாம்.  
பாதிப்பும் / தீர்வும்
ஈறு: ஈறுகள்தான் நம் பற்களைப் பாதுகாக்கும் அமைப்பு. பல் நேரடியாக தாடை எலும்புடன் இணையவில்லை. நார் போன்ற அமைப்புகளே பல்லையும் எலும்பையும் இணைக்கின்றன. இந்த எலும்பை போர்வை போன்று மூடிப் பாதுகாக்கிறது ஈறு. பல்லுக்கும் ஈறுக்கும் இடையில் 1.2 மி.மீ. ஆழம் உள்ளது. இங்குதான் பற்களைப் பாதுகாக்க ஒரு வகையான திரவம் சுரக்கிறது. பற்களில் உணவுத் துகள்கள், காரை படியும்போது ஈறு பாதிக்கப்பட்டு, பல்லையும் எலும்பையும் இணைக்கும் தொடர்புகள் துண்டிக்கப்படுகின்றன. இந்த ஆழமானது 3 முதல் 4 மி.மீ. அளவுக்கு செல்வதை 'கம் பாக்கெட்’ என்று சொல்வோம். உணவுத் துகள்கள் அதிக அளவில் உள்ளே போய் உட்கார்ந்துகொள்ளும். உணவுத் துகள்களில் கிருமிகள் வளரும். இதை வெளியேற்ற உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்புகள் போராடும். இந்த போராட்டத்தில் உடல் பாதுகாப்பு அமைப்பு தோல்வியுறும்போது கிருமி வேகமாக வளர்ந்து எலும்பை அரிக்கத் தொடங்கும். 50 சதவிகிதம் அளவுக்கு ஈறுகள் ஆழம் அதிகரிக்கும்போது பல் வலுவிழக்கிறது. இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரிப்படுத்தலாம். பிரச்னையின் தீவிரத்தை பொருத்து சிகிச்சை தீர்மானிக்கப்படுகிறது.
ஈறுகளில் வீக்கம் ஏற்படும்போது அதை சரிப்படுத்த நம் உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும். கர்ப்பிணிகளுக்கு முன்கூட்டியே குழந்தை பிறப்பதற்கு, இந்த ஹார்மோன் காரணமாகிவிடுகிறது. மேலும், இந்த ஹார்மோன் இதய நோயையும் உண்டுபண்ணலாம்.  எனவே, கர்ப்பிணிகள் ஈறுகளில் ரத்தக் கசிவு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறவேண்டும்.
வாய் துர்நாற்றம்:
வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. உணவுத் துகள்கள் பல் இடுக்குகளில் மாட்டிக்கொண்டு வாய் கொப்பளிக்கும்போதோ அல்லது பல் துலக்கும்போதோ வெளியேறவில்லை என்றால் அழுகிப்போய் கெட்ட வாடை வீசலாம். தொண்டையில் நோய்த் தொற்று ஏற்பட்டு துர்நாற்றம் வீசலாம். ஈறு நோய், சொத்தைப் பல், வயிறு தொடர்பான பிரச்னைகளால் துர்நாற்றம் அடிக்கலாம். இதுபோன்று இன்னும் வேறு பல காரணங்கள் உள்ளன. வாயில் துற்நாற்றம் எதனால் வீசுகிறது என்பதைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை எடுப்பது மட்டுமே இந்த பிரச்னைக்குத் தீர்வு. வெறும் மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது என்பது பிரச்னையைத் தற்காலிகமாக ஒத்திப்போடுமே தவிர, முழுமையான தீர்வைத் தராது.
பற்கூச்சம்:
பற்களின் எனாமலை அடுத்துள்ள டென்டைன் என்ற பகுதியில் குளிர்ந்த அல்லது சூடான பானங்கள் நேரடியாகப் படும்போது பற்கூச்சம் ஏற்படும். டென்டைன் பகுதியில் நிறைய மெல்லிய குழாய்கள் போன்ற அமைப்பு இருக்கும். இதன் மூலம் வெப்பம், குளிர் போன்றவை ரத்தநாளங்கள், நரம்புகள் கொண்ட பகுதியான பற்குழிக்குக் கடத்தப்படுவதால் இந்த பற்கூச்சம் ஏற்படுகிறது. முறையற்ற வகையில் பற்களைத் தேய்ப்பது, நீண்ட நேரம் பல் தேய்ப்பது போன்றவற்றால் எனாமல் தேயவும்,  ஈறுகளும் பற்களில் இருந்து விலகிச் செல்லவும் வாய்ப்புள்ளது. ஈறுநோய்கள் ஏற்படும்போது ஈறுகளில் வீக்கம், பல் உடைதல், தூக்கத்தில் பல் கடிக்கும் பழக்கம் போன்றவற்றாலும் கூச்சம் ஏற்படலாம். எதனால் பற்கூச்சம் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்தே சிகிச்சை அளிக்கப்படும்.
ஆயில் புல்லிங் அவசியமா?
இயற்கையான நல்லெண்ணெயில் மட்டுமே வாய் கொப்பளிப்பு செய்யப்படுகிறது. 15 முதல் 20 நிமிடங்கள் கொப்பளித்த பிறகு அந்த எண்ணெயை வெளியே துப்பிவிட வேண்டும். பிறகு சுத்தமான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். ஆயில் புல்லிங் செய்வதற்கு முன்பு பல் துலக்க வேண்டியது இல்லை. ஆனால், ஆயில் புல்லிங் செய்து முடித்த பிறகு பிரஷ் செய்வதும், வாயை நன்றாக சுத்தம் செய்வதும் அவசியம். ஆயில் புல்லிங் செய்வதால் பல் வலி, பற்கள் விழுதல், வாயில் நோய்த் தொற்று, ஈறுகளில் ரத்தக் கசிவு போன்ற பிரச்னைகள் நீங்குவதாகக் கூறப்படுகிறது. உடலுக்கு கெடுதல் இல்லாதது என்பதால், ஆயில் புல்லிங் செய்வதில் தவறு இல்லை.
 வரிசையும்/அமைப்பும் ஞானப்பல்:
விவரம் தெரிந்த 17-18 வயதில் ஒருவருக்கு கடைவாயில் முளைக்கும் பல்லுக்கு ஞானப்பல் என்று பெயர். ஒருகாலத்தில் மனிதனுக்கு 44 பற்கள் இருந்தது. அப்போது வேட்டையாடுவது, எதையும் பச்சையாகவே சாப்பிடுவது என இருந்ததால் அத்தனைப் பற்கள் தேவைப்பட்டன. இன்று பற்களால் மென்று சாப்பிடும் பழக்கம் குறைந்துகொண்டே வருவதால், தற்போது இருக்கும் 32 பற்கள் வரும் காலத்தில் 28 பற்களாக குறைந்துவிடலாம். இந்த ஞானப் பற்கள் வளரப் போதுமான இடம் இல்லாததால் மற்ற பற்களில் முட்டிக்கொண்டு பற்களின் வரிசையையே பாதிக்கச் செய்துவிடுகிறது. இதனால் உணவு மெல்லுதல் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, பிரச்னை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஞானப் பற்களை அகற்றிவிடுவது நல்லது.
தற்போது தூக்க நிலையில் ஞானப் பற்களை அகற்றும் நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. பற்களைப் பிடுங்க வேண்டிய நபருக்கு, மயக்க மருந்து நிபுணர் உதவியுடன் மயக்க மருந்து செலுத்தப்படும். நன்கு தூக்க நிலையில் இருக்கும்போது, உணர்வு நீக்க ஊசியை செலுத்தி பற்கள் பிடுங்கப்படுகின்றன. இதனால் பல் பிடுங்கும்போது வலி இருக்காது. விழிப்பு நிலைக்கு வரும்போது, வலி குறைவாகவே இருக்கும்.
'கிளிப்’ பற்றி கிளிக்!
பற்கள் தூக்கலாகவோ, உள்ளடங்கியோ, முன்னும் பின்னுமாகவோ இருந்தால் கிளிப் போட்டு சரிசெய்யலாம். கிளிப் போடுவது என்பது பற்களின் அமைப்பில் உள்ள பிரச்னையைப் பொருத்தது. வளரும் குழந்தைகளுக்கு பால் பற்கள் அனைத்தும் விழுந்து நிலையான பற்கள் தோன்றும் நேரத்திலேயே தேவைப்படலாம். சிலருக்கு அதற்கு முன்பாகவே செய்ய வேண்டியிருக்கலாம். முன்பக்கமாக போடுவதால் முக அழகு குறையும் என்று நினைப்பவர்களுக்கு, மறைவாக பல்லுக்கு பின் பக்கமாகவும் போடக்கூடிய கிளிப் வகைகள் வந்துவிட்டன.  யாருக்கு எந்த மாதிரியான கிளிப் போடலாம் என்பது அவரது பற்களைப் பரிசோதித்த பின்னரே தெரியவரும். கிளிப் அணிந்திருக்கும் காலத்தில் பற்கள் பராமரிப்பில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். கிளிப் இடுக்குகளில் உணவுத் துகள்கள் தங்க வாய்ப்பு உண்டு. இதற்கென உள்ள பிரத்யேக பிரஷ் கொண்டு துணுக்குகளை அகற்றவேண்டும்.
கிளிப் போடும் சிகிச்சை முடிய ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகலாம். கிளிப் போட்ட பிறகு நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு ஒரு முறை டாக்டரை சென்று சந்திக்க வேண்டும்.
அவரது ஆலோசனைப்படி, உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தாடையின் அளவு சிலருக்கு அதிகமாக இருந்தால், முதலில் அதை சரிசெய்ய வேண்டும். பிறகு, அறுவைசிகிச்சை தேவைப் பட்டால், பல் மற்றும் தாடையின் அளவை எக்ஸ்ரே மூலம்  கண்டறிந்து, அதற்கேற்ப பல் மருத்துவரால் முடிவு செய்யப்படும்.
ஸ்லீப் ஆப்னியா:
தூக்கம் தொடர்பான பிரச்னை ஏற்படுவதற்கு தாடை மற்றும் பற்களின் அமைப்பும் ஒரு காரணம். குறட்டை விடுவதற்கும் இது ஒரு காரணம். ஒருவருக்குப் பற்கள் தேய்வதால் தாடையின் உயரம் குறைந்து, தூங்கும்போது நாக்குக்கு போதுமான இடமும் குறைந்து, நாக்கு தொண்டைக்கு சென்று மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்திவிடும். இந்த பிரச்னையை சரிசெய்ய முடியும். தாடையின் உயரத்தைக் கூட்டி, சில வகை கிளிப் போடுவதன் மூலம் குறிப்பிட்ட வகை 'ஸ்லீப் ஆப்னியா’வை சரி செய்யலாம்.
சிகிச்சை முறைகள்
பல்சொத்தை:
  பல் சொத்தை எந்த அளவுக்குப் பரவியுள்ளது, அது எந்த நிலையில் உள்ளது என்பதைப் பொருத்து சிகிச்சை முறைகள் மாறும். பல்லில் எனமாமல், டென்டின், பற்கூழ் என மூன்று பகுதிகள் உள்ளன. இதில் பற்கூழ் பகுதிதான் பற்களின் இதயம் என்று சொல்லும் அளவுக்கு முக்கியமானது. பற்கூழில் இருந்து எவ்வளவு தூரம் பல் சொத்தை உள்ளது என்பதைப் பொருத்து ஃபில்லிங் செய்ய வேண்டுமா அல்லது ரூட் கெனால் செய்ய வேண்டியிருக்குமா என்று முடிவு செய்யப்படும்.  
  பல் சொத்தை உள்ளதா, எந்த நிலையில் பாதிப்பு உள்ளது என்பதை சாதாரணப் பரிசோதனை மூலமாகவும், பிறகு எக்ஸ்ரே மூலமாகவும் கண்டறியப்படும். சொத்தையானது எனாமல் வரை மட்டுமே இருந்தால் அதற்கு சாதாரண ஃபில்லிங் எனப்படும் நிரப்புதல் போதுமானது. டென்டின் வரை பாதிப்பு இருந்தால் பல் கூச்சம் இருக்கும். அதைத் தொடர்ந்து பல் வலி வரும். பற்கூழில் இருந்து எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொருத்து ந்பில்லிங் செய்யப்படும்.
 சொத்தையானது பற்கூழுக்கு அருகில் அல்லது பற்கூழ் வரை சென்றுவிட்டது என்றால் ரூட் கெனால் மட்டுமே தீர்வு. ஒரு காலத்தில் இப்படிப்பட்ட பாதிப்புக்கு பல்லைப் பிடுங்குவது மட்டுமே தீர்வாக இருந்தது. அதற்கு மாற்றாக வந்ததுதான் ரூட் கெனால்.
 பல்லின் உள்ளே வேர்ப் பகுதி உள்ளது. இந்த வேர் வழியாகத்தான் ரத்தமானது பல்லின் மையப் பகுதிக்கு வருகிறது. சொத்தையானது இந்த மையப் பகுதியைத் தாக்கிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சொத்தை வந்த வழியாக கிருமித் தொற்றை சுத்தம்செய்து, பற்கூழை அகற்றிவிட்டு, வந்த பாதையை சுத்தம்செய்து, பிரத்யேகமான எதற்கும் பாதிப்பை ஏற்படுத்தாத, பாதிக்கப்படாத பொருளைக்கொண்டு மூடுவதுதான் ரூட் கெனால்.
 ரூட் கெனால் செய்த பிறகு, 15 நாட்களுக்குப் பிறகு அந்த பல்லுக்கு கேப் போடப்படும்.
மரம் பச்சையாக இருக்கும்போதுதான் கிளைகளை வளைக்க முடியும். காய்ந்துவிட்டால், வளைக்கும்போது ஒடிந்துவிடும். ரூட் கெனால் செய்து, பற்கூழ் பகுதியை அகற்றிவிடுவதால் பல்லுக்கு ரத்த ஓட்டம் இருக்காது. இதனால் பல் காய்ந்துபோய் நொறுங்கிவிடும். இதைத் தவிர்க்க கேப் போடுவது மிகவும் அவசியம். செராமிக், தங்கம் உள்ளிட்ட உலோகங்கள் என அவரவர் வசதிக்கு ஏற்ப இதைப் போட்டுக்கொள்ளலாம்.
  சிலருக்கு ரூட் கெனால் சிகிச்சைகூட செய்ய முடியாத அளவுக்கு சில பற்கள் மிகவும் மோசமாக இருக்கும். அத்தகைய பற்களை அகற்றிவிடுவது மட்டுமே ஒரே வழி. பல் மருத்துவரை குறிப்பிட்ட இடைவெளியில் சந்திப்பதன் மூலம் பல் சொத்தையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரிப்படுத்திவிட முடியும்.
செயற்கை பல்:
ஒரு பல் எடுத்தால், அதன் அருகில் உள்ள மற்ற பற்கள் அந்த இடத்தை நோக்கி நகர ஆரம்பிக்கும். மேல் பகுதியில் உள்ள பல் கிட்டத்தட்ட பயனற்ற பல் போலத்தான். அதுவும் பல் இல்லாத இடம் நோக்கி நகர ஆரம்பிக்கும் (விவீரீக்ஷீணீtவீஷீஸீ ஷீயீ tமீமீtலீ). இதைத் தவிர்க்க, அந்த இடத்தில் பொய் பல் கட்ட வேண்டியது மிகவும் அவசியம். முன்பு பிரிட்ஜ் என்ற முறையில் இடைவெளி உள்ள இடத்தில் செயற்கைப் பல் கட்டப்பட்டது. ஆனால் இந்த முறையில் நன்றாக இருக்கும் இரண்டு பற்களையும் செதுக்க வேண்டியிருந்தது. அந்த இரண்டு பற்களின் ஆதரவுடன் எளிதில் கழன்றுவிடாதபடியான செயற்கைப் பல் கட்டப்பட்டது.
பக்கத்தில் உள்ள இரண்டு பற்களின் ஆதரவில் இந்த செயற்கைப் பல் இருப்பதால், அந்த பற்களில் ஒன்றில் பாதிப்பு வந்தாலும் இதைப் பொருத்தமுடியாது. இது போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கும், பல பற்கள் மாற்ற வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கும் பயன்படும்படி வந்ததுதான் இம்பிளான்ட். அதாவது செயற்கையாக பல்லின் வேர் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பல் கட்டும் தொழில்நுட்பம்.
இம்ப்ளான்ட்:
இயற்கையாக எப்படி வேர் போன்ற அமைப்புடன் பல் உள்ளதோ அதே போன்று செயற்கையாக ஸ்கூரு போடும் அமைப்பு இம்ப்ளான்ட் அறுவைசிகிச்சை மூலம் உருவாக்கப்படும். குறிப்பிட்ட கால இடைவெளியில் இதன் மேல் செயற்கைப் பல் கட்டப்படும். கழன்றுவிடும் என்ற பயம் இந்தத் தொழில்நுட்பத்தில் இல்லை. ஒரு பல் முதல் அனைத்துப் பற்களுக்கும் இம்பிளான்ட் சிகிச்சை செய்யலாம்.
அச்சு அசலாக, இயற்கைப் பல் போன்று தோற்றம் அளிக்கும் செராமிக் பற்களைக் கட்டிக்கொள்ளலாம்.  
தற்போது சிபிசிடி என்கிற டென்டல் சிடி ஸ்கேன் கருவி வந்துள்ளது. இதன்மூலம், எலும்பின் அடர்த்தி, ஆழம், இம்பிளான்ட் போடும் இடத்தில் நரம்புகள், ரத்தக் குழாய்கள் செல்கிறதா, நரம்பு ரத்தக்குழாய்க்குப் பாதிப்பின்றி எப்படி இம்பிளான்ட் போடலாம் என்பது போன்ற முடிவுகள் எடுக்க இந்த டென்டல் சிடி ஸ்கேன் உதவும்.
ஒரே நாளில் பல் கட்டும் நவீன முறைகளும் உள்ளன. இதற்கு டாக்டரை அணுகி எந்த மாதிரியான பல் வேண்டும் என்பது உள்பட சில ஆலோசனைகள், பரிசோதனைகள், வடிவமைப்பு போன்றவற்றை முடிவு செய்துவிட வேண்டும். அறுவைசிகிச்சை நடக்கும் தினத்தில் இம்பிளான்ட் பொருத்தப்பட்டு, ஏற்கனவே தயாராக உள்ள பல் செட் அதில் பொருத்தப்படும்.
டூத் லேமினேட்:
திருமணத்துக்குத் தயாராக இருப்பவர்கள் கடைசி நேரத்தில் நிறம் மாறிய பல், பல் இடைவெளியே அகற்ற நினைப்பார்கள். குறுகிய காலத்தில் இதை சரிசெய்ய வந்ததுதான் டூத் லேமினேட் சிகிச்சை. செராமிக் கொண்டு இந்த சிகிச்சை செய்யப்படும். குறுகிய காலத்தில் செய்தாலும் இது நிரந்தர அமைப்புதான்.
லேசர் சிகிச்சைகள்:
ஈறுகளில் அறுவைசிகிச்சை செய்ய, சொத்தைப் பல்லில் உள்ள கிருமித் தொற்றை அழிக்க, பற்களை வென்மையாக்க எனப் பல வகைகளில் லேசர் கருவி பயன்படுத்தப்படுகிறது. சிலருக்கு ஈறுகள் மிகவும் கருப்பாக இருக்கும். இவர்களுக்கு லேசர் சிகிச்சையின் மூலம் பிங்க் நிறத்துக்கு ஈறுகளைக் கொண்டுவர முடியும்.
எலும்பு கிராஃப்ட்டிங்:
சிலருக்கு பற்கள் எல்லாம் விழுந்து போயிருக்கும். அல்லது விழும் நிலையில் இருக்கும். அவர்களுக்கு இம்பிளான்ட் செய்யலாம் என்றால், தாடையின் அடர்த்தி மற்றும் உயரம் குறைவாக இருக்கும். இதனால் இம்பிளான்ட் செய்ய முடியாது என்று டாக்டர்கள் தெரிவிப்பார்கள். இவர்களுக்கு செயற்கைப் பல் கட்டும் வகையில் அளிக்கப்படுவதுதான் எலும்பு கிராஃப்ட்டிங் சிகிச்சை. முகத்தின் மேல் தாடையில் சைனஸ் என்ற ஒரு அமைப்பு உள்ளது. மேல்தாடைக்கும் சைனஸ் அமைப்புக்கும் இடையே உள்ள எலும்பின் தடிமன் மற்றும் உயரம் எவ்வளவு உள்ளது என்பதை ஓ.பி.ஜி. எக்ஸ் ரே மூலம் கண்டறியலாம். 8-10 மி.மீ. அளவுக்கு தடிமன் இருந்தால், அவர்களுக்கு இம்பிளான்ட் செய்ய முடியும். 5-6 மி.மீ. அளவுக்கு எலும்பு இருந்தால் சைனஸ் லிஃப்ட் என்ற சிகிச்சை முறையில் இம்பிளான்ட் செய்யப்படுகிறது. அதாவது உடலின் வேறு பகுதியில் இருந்து எலும்பை எடுத்து அறுவைசிகிச்சை மூலம் தாடையில் பொருத்தி, பின்னர் இம்பிளான்ட் செய்யப்படும். இதேபோன்று ஈறுக்கும் அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது.
அவசியம் பார்க்க வேண்டும் பல் மருத்துவரை...
  குழந்தைக்கு ஆறு மாதம் ஆனதும், முதன் முறையாகப் பல் மருத்துவரிடம் குழந்தையை கொண்டுசென்று காண்பிக்க வேண்டும். இது அந்தக் குழந்தைக்கு எதிர்காலத்தில் பல் தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்க உதவும்.
  பல் முளைக்கும்போது ஏதேனும் பிரச்னை இருந்தாலும் அதைக் கண்டறிந்து சரிப்படுத்தலாம். ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருட இடைவெளியில் பல் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம், சொத்தைப் பல், ஈறு நோய்கள் வராமல் தடுப்பதுடன், ஆரம்ப நிலையிலேயே அதை சரிப்படுத்திவிட முடியும்.
பற்களின் அமைப்பு, வரிசை போன்றவற்றில் குறைபாடு இருந்தாலும் சரி செய்துவிடலாம்.
 சர்க்கரை நோயாளிகளுக்கு ஈறு தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை டாக்டரை அணுகி முழுப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
  சர்க்கரை நோயாளிகள் இரவு படுக்கும் முன்பு பால் மற்றும் இனிப்புப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். கூர்மையான பற்களினால், ஈறுகளிலோ, நாக்கிலோ புண் ஏற்பட்டால், உடனடியாக பல் மருத்துவரிடம் காண்பித்து சரிசெய்துகொள்ள வேண்டும்.
  லேசான வலி மற்றும் வீக்கம் இருந்தாலே, மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
பற்களின் பகைவன்
புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் பற்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கும்பகோணத்தைச் சேர்ந்த பல் மருத்துவர் பி.பிரகாஷ் விளக்குகிறார்:
  இன்று உலக அளவில் தவிர்க்கக் கூடிய மரணங்கள் அதிகமானதற்கு புகையிலைப் பழக்கம் மிக முக்கியக் காரணம். புகை பிடிப்பதாலும், புகையிலைப் பொருட்களை மெல்லுவதாலும் வாய் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
  புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு வாயின் வெப்பநிலை அதிகரிக்கும்.  வாயில் உள்ள திசுக்கள் மாற்றம் ஏற்பட்டு உலர்ந்து போய் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் மிக எளிதில் பூஞ்ஜை மற்றும் வைரஸ் போன்ற நுண்ணுயிர் தொற்று ஏற்படலாம்.
  புகைப்பவர்களுக்கு மற்றவர்களைவிட புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு ஆறு மடங்கு அதிகரிக்கும்.
 புகைபிடிப்பவர்களுக்கு ஈறு நோய் வருவதற்கான வாய்ப்பு இரு மடங்கு அதிகம். ஈறு வீக்கம், பல் ஆடுவது, ஈறுகளில் சீழ், ரத்தம் போன்ற பிரச்னைகள் வரலாம். புகைப்பிடிப்பதால் பற்களில் கறை ஏற்படும்.
செய்யக்கூடியவை:
 சாப்பிட்டதும், ஒரு மணி நேரம் கழித்து, அவசியம் பல் துலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்
 தூங்கச் செல்வதற்கு முன்பு பல் துலக்க வேண்டும்
 புகைத்தல், மது அருந்துதல் கைவிடுங்கள்.
 போதுமான அளவுக்கு தண்ணீர் அருந்துங்கள்.
 உணவு சாப்பிடும் நேரத்தில் மட்டும் இனிப்பு சாப்பி டுங்கள்.
 ஜூஸ் செய்து குடிப்பதற்குப் பதிலாக பழங்களைக் கடித்து சாப் பிடுங்கள்.
 ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பால் பொருட்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 குளிர்பானம் குடிப் பதைத் தவிருங்கள். இல்லையெனில், ஸ்ட்ரா பயன்படுத்துங்கள்.
குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்தியுங்கள்.
செய்யக் கூடாதவை:
 எவ்வளவு கோபமாக் இருந்தாலும் 'நறநற’வெனப் பல்லைக் கடிக்காதீர்கள்
 நகத்தைக் கடிக்கக்கூடாது.  அதன் மூலம் கிருமிகள் வாய்க்கு சென்று வியாதிகளைப் பரப்பிவிடும்.
 பல்லை அழுத்தித் தேய்க்காதீர்கள்.
 பாட்டில் மூடி போன்ற கடினமான பொருட்களை பல்லால் கடித்துத் திறக்க முயற்சிக்காதீர்கள். பற்களுக்கு சேதம் ஏற்படுத்துவதுடன், உதடுகளிலும் கீறல் அல்லது காயம் ஏற்படலாம்.
மேற்சொன்ன ஆலோசனைகளைப் பின்பற்றினால், ஆரோக்கியமான புன்னகை உங்கள் வசம்.
தவிர்க்க வேண்டியவை:
கார்பனேட்டட் கோலா குளிர்பானங்களில் உள்ள அமிலத்தன்மையானது பல்லின் எனாமலைப் பாதிக்கும்..
நொறுங்க தின்றால்... பல்லுக்கு ஆயுசு!
பல் வலி, பல் ஆடும் பிரச்னை உள்ளவர்கள் காய்கறி, பழங்களை அப்படியே கடித்துச் சாப்பிடும்போது, பல்லில் விரிசலை ஏற்படுத்தி,  விழவும் செய்துவிடும். எனவே, கடிக்க ஏற்ற வகையில் சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக மென்று சாப்பிடுங்கள்.
'ஷாக்’லெட்
பல்லில் ஒட்டிக்கொள்ளக் கூடிய கடினமான சாக்லெட்களில் உள்ள இனிப்பு நீண்ட நேரத்துக்கு நம் பல் இடுக்குகளில்  ஒட்டிக்கொள்ளும். இதனால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு பற்கள் பாதிக்கப்படுவதால், இவற்றை தவிர்ப்பது நல்லது.
உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் பாப்கார்ன்: சிப்ஸ் துகள்கள் பல் இடுக்குகளில் சிக்கிக்கொள்ளும்போது அதைச் சிதைக்கும் பாக்டீரியாக்கள் அமிலத்தை வெளியேற்றி பற்சிதைவுக்கு வழிவகுக்கிறது. பாப்கார்ன் கவரின் அடியில் பொரியாத சில சோள விதைகள் இருக்கும். மிகக் கடினமான இந்த விதைகளைக் கடிக்கும்போது, பல்லுக்குப் பாதிப்பு ஏற்படலாம்.
உலர் பழங்கள்: திராட்சை, பேரீட்சை போன்ற உலர் பழங்களை சாப்பிட்டதும் பல்லின் இடுக்குகளில் நன்கு ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டவை. இவற்றை, சாப்பிட்டதும் பல்லைச் சுத்தம் செய்ய மறந்துவிடக் கூடாது.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 8432835620507805814

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item